தி.மு.க.வை 'வந்து பார்' என்கிறார் இந்த சுயேச்சை!

கோவை: மேட்டுப்பாளையம் தி.மு.க. வேட்பாளர் கவிதாவுக்கு எதிராக, அதே கட்சியின் முக்கிய பிரமுகர் சண்முகசுந்தரம் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், இந்த முறையும் தனக்கு சீட் உறுதி என்ற நம்பிக்கையில், தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பரிசுகளை இறக்கி ஆவலுடன் காத்திருந்தார். கவிதா பெயர் அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டு அழுதார். மக்கள் ஆறுதல்படுத்த நேர்ந்தது.

தொகுதி முழுவதும் வசப்படுத்தி வைத்திருந்தேன். எதிர்க்கட்சியினர் கூட நான் தான் திமுக வேட்பாளர் என முடிவு செய்திருந்தனர். எனக்கு சீட் மறுத்ததை தொகுதி மக்கள் ஏற்கவில்லை. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து சதி செய்து என்னை தோற்கடித்த கவிதாவுக்கு அறிவாலயம் சீட் கொடுத்தால் என்ன அர்த்தம்?” என்று குமுறுகிறார் சண்முகசுந்தரம்.

கட்சியிலும் வெளியிலும் சண்முகசுந்தரத்துக்கு செல்வாக்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 'இந்த தடவை உங்களுக்கு சீட் இல்லை, செலவு செய்ய வேண்டாம்' என முன்பே தலைமை அவரிடம் கூறியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என கட்சியினர் புலம்புகின்றனர்.

”சுயேச்சையாக நிற்கிறார் என்பதால் அவரை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த தேர்தலில் 2,456 வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றார். 2016 ல் த.மா.கா. வேட்பாளராக நின்று 13,324 ஓட்டு வாங்கினார். செம வெயிட்டான 1 லட்சம் டம்ளர் வாங்கி வைத்துள்ளார். செலவுக்கு அஞ்ச மாட்டார். கட்சிக்கு சோதனை தான்” என்றனர்.

Advertisement