உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு

சென்னை: 'உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடத்திருப்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமைச் செயலருக்கு, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சிமன்ற குழு புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் கூறியிருப் பதாவது:

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு, டிச., 27ல் நடந்தது. அதில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வில், இதுவரை இல்லாத வகையில் குளறுபடிகள் நடந்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது.

இரண்டாம் தாள் வினாத்தாளில், அனைத்து பாடங்களிலும், 70க்கும் அதிகமான வினாக்கள், சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் முன்னதாகவே வெளியாகி உள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையத்தில், விதிமுறைகளுக்கு புறம்பாக, நேரம் முடிந்த பின்னரும், சில தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்பது, அனைத்து தேர்வர்களின் கருத்து. இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி பேராசிரியர் தேர்வை, மீண்டும் நேர்மையாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement