சென்னை மாவட்ட கிக் பாக்சிங் 161 வீரர் - வீராங்கனை மோதல்

சென்னை:சென்னை மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, வீரர்களின் அதிரடியான மோதல்களால் பார்வையாளர்களை கவர்ந்தது.

சென்னை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்காவில் நேற்று நடந்தது.

போட்டியில், சென்னை மாவட்டத்தின் ஏழு கிளப்புகளை சேர்ந்த 56 பெண்கள், 105 ஆண்கள் என, மொத்தம் 161 பேர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

சப் - -ஜூனியர், ஜூனியர், சீனியர் என, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், பாயின்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், புல் காண்டாக்ட் போன்ற பல்வேறு வகைகளில், வீரர்கள் கடுமையாக மோதினர். ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக நடந்தது.

போட்டியை, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்க மாநில செயலர் சுரேஷ்பாபு துவக்கி வைத்து பேசுகையில், “கிக் பாக்சிங் விளையாட்டில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவது நல்ல வளர்ச்சிக்கான அறிகுறி; அரசின் நிதியுடன் மற்றும் ஒத்துழைப்பு வழங்கினால், பல சாதனைகள் படைப்போம்,” என்றார்.

இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர் - வீராங்கனையர், வரும் மே 7 முதல் 10 வரை தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற உள்ளனர்.

Advertisement