காஞ்சியில் ஒரு மணி நேரம் மழை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று பகல் 12:00 மணியளவில் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழகம் முழுதும் கோடை காலம் துவங்கியது முதல், சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசியது. கோடை வெப்ப நிலை காரணமாக முதியோர், நோயாளிகள், குழந்தைகள் போன்றோர் அவதிப்படுகின்றனர்.

கட்டுமான தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் உட்பட பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடுமையான வெப்பம் நிலவிய சூழலில், காஞ்சிபுரத்தில் நேற்று பகல் 12:00 மணியளவில், ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்தது.

ஸ்ரீபெரும்புதுார்

ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டிதீர்த்த கன மழையினால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை 12 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில், நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால், வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது.

Advertisement