'ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தனித்திறன் உண்டு' 

சென்னை:உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டை மற்றும் மடிப்பாக்கத்தில் உள்ள கிட்ஸ் கேர் ரிஹாப் சென்டரில், விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

லயோலா கல்லுாரி பேராசிரியர்கள் பலர் பங்கேற்று, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் உரையாடினர்.

பின், சிறப்பு பள்ளியின் தாளாளர் ராதா பாலச்சந்தர் பேசியதாவது:

ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு சம உரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு, இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி குறைபாடு. ஒருவரின் தொடர்பு கொள்ளும் திறன், சமூக பழகும் விதம், நடத்தை ஆகியவை பாதிக்கக்கூடும். மேலும், பல நேரங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படலாம்.

அவர்களிடம் பல திறமைகள் மற்றும் தனித்துவமான சிந்தனை திறன் இருக்கும். அவற்றை வெளிக்கொண்டு வருவதுடன், சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கவும் உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***





Advertisement