சிறப்பு இட ஒதுக்கீடு: தி.மு.க., மீது திருநங்கையர் கோபம்

1

சென்னை: 'மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, 1 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பை, 21 மாதங்களாகியும், சமூக நலத்துறை செயல்படுத்தாமல், மெத்தனம் காட்டி வருகிறது' என, திருநங்கையர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக நலத்துறை சார்பில், திருநங்கையருக்கு ஓய்வூதியம் உட்பட, பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. எனினும், கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற, இட ஒதுக்கீடு அவசியம் என்பது, மூன்றாம் பாலினத்தவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

உச்ச நீதிமன்றம், 'திருநங்கை மற்றும் திருநம்பி ஆகியோரை, மூன்றாம் பாலினமாக, சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் வகையில், மாநில அரசுகள், அவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.

இதை கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் செயல்படுத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த தீர்ப்பு தற்போது வரை பின்பற்றப்படவில்லை. இப்பிரச்னையில், சென்னை உயர்நீதிமன்றம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, 1 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, கடந்த 2024ல் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நீதிமன்ற, தீர்ப்பு வெளியாகி 21 மாதங்களாகியும், சமூக நலத்துறை அதிகாரிகள், இதை செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருவதாக, திருநங்கையர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து, சென்னையை சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா ராஜ் கூறியதாவது: மூன்றாம் பாலினத்தவர் களுக்கு, 1 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு, மூன்று மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என, கடந்த 2024 ஜூன் 2ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பு வெளியாகி 21 மாதங்களாகியும், தி.மு.க., அரசு அதை செயல்படுத்தவில்லை. தற்போது தேர்தலையொட்டி, எங்கள் ஓட்டுகளை கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement