பாகிஸ்தான் மீதான பாசத்தில் கனவுலகில் ராகுல் மிதக்கிறார்: புதுச்சேரியில் அமித் ஷா கடும் தாக்கு

புதுச்சேரி: “பாகிஸ்தான் மீதான பாசத்தில், கனவுலகில் காங்., - எம்.பி., ராகுல் மிதக்கிறார்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருக்கானுாரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது:

புதுச்சேரியை உயர்ந்த, உன்னதமான இடத்துக்கு எடுத்துச் செல்வோம் என உறுதி அளிக்கிறேன். கடந்த காங்., நாராயணசாமி ஆட்சி, புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது. அதை சரி செய்யவே ஐந்து ஆண்டாகி விட்டது. தே.ஜ., கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கிறோம்.

ஆனால், 'இண்டி' கூட்டணியில் இப்போதே தொகுதிக்காக, பதவிக்காக சண்டை போட்டு அடித்துக் கொண்டிருக்கின்றனர். இரு கம்யூனிஸ்டுகளும் தனித்து போட்டியிடுகின்றனர். தி.மு.க., - காங்., கூட ஒன்றாக இல்லை, ஐந்து தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கின்றனர்.

வளைகுடா போரால், பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என ராகுல் கூறியுள்ளார். ராகுல் கனவுலகில் மிதக்கிறார்.

அவர் மிகவும் நேசிக்கும் பாகிஸ்தானில் தான் பெட்ரோல் ரூ.458, டீசல் ரூ.520 ஆக உயர்ந்துள்ளது; இந்தியாவில் இல்லை. பாகிஸ்தான் விலை உயர்வை கூறி மக்களை ராகுல் பயமுறுத்துகிறார்.

உலகம் முழுதும் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வார வேலை நாட்கள் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்ய கூறி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இந்த நிலை இருக்கிறதா? மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 1 ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை.

புதுச்சேரியை தகவல் தொழில்நுட்ப மாநிலமாக உயர்த்த அருமையான திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் ஆண்டுக்கு 3 லட்சம் லேப்டாப் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதுபோல, புதுச்சேரி முன்னேற்றத்திற்கு வழி செய்து வருகிறோம்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement