சீமான் பேச்சுகள் வெறும் ‛‛சவடாலா'' இல்லை ‛‛சவாலா'': அதிர்ச்சியில் ‛‛அன்பு தம்பிகள்''

16

நமது சிறப்பு நிருபர்




தேர்தல் என்றாலே சில அரசியல் தலைவர்கள் வாய்க்கு வந்ததை ‛‛அடிச்சு'' விடுவதும், செய்ய முடியுமா முடியாதா என யோசிக்காமல் உளறுவதும், மக்களை ஒன்றும் தெரியாத ‛‛கூமுட்டைகள்'' என நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு பேசுவதும் வழக்கம் தான். சில தலைவர்கள் சில நேரங்களில் ரொம்ப‛‛லாஜிக்''காக பேசுவார்கள். சில நேரங்களில் ரொம்ப ‛‛அபத்தமாக'' பேசுவார்கள். இதில் நாம் தமிழர் சீமான் முக்கியமானவர்.

சீமானின் கட்சி தேர்தல் அறிக்கையில், இப்படியான கவர்ச்சியான இலவச வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. அதற்கு மாற்றாக தூய குடிநீர் இலவசம் போன்ற அறிவிப்பே இடம்பெற்றன. ‛‛பரவாயில்லையே, கொஞ்சம் லாஜிக்காக இருக்கிறாரே'' என்று நினைத்தால் அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது அவர் கூறும் வாக்குறுதிகள், ‛‛லாஜிக்''கை அடித்து நொறுக்குகின்றன. இதோ அவற்றில் சில:

* சென்சாரில் கட் செய்வது போல, சினிமா பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் ‛‛கட்'' செய்யப்படும்.


* படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை.
* மாடு மேய்க்க ஹெலிகாப்டர் தருவேன், குதிரை மேய்க்க ஜீப் தருவேன்.


* ஆடு, மாடு, தேனீ, கழுதை மற்றும் பன்றி வளர்ப்பை அரசு வேலையாக அறிவிப்பேன்.
* ஓட்டளிப்பவர்களுக்கு நன்கொடை ரசீது போல சான்றிதழ் வழங்க வலியுறுத்துவேன்.
இப்படி சீமானின் 'வாக்குறுதி வார்த்தைகள்' வந்துவிழும் நிலையில், தேர்தல் முடியும் வரை இன்னும் என்னென்னவெல்லாம் கேட்க வேண்டி இருக்குமோ என்ற அதிர்ச்சியில் மக்கள் காத்திருக்கின்றனர்.



நாம் தமிழர் கட்சியின் இதுபோன்ற தேர்தல் அறிவிப்புகள் எல்லாம் சாத்தியப்படுத்த முடியுமா என்று கேட்டால், 'சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்துபவன் தான் புரட்சியாளன்' என்கிறார் சீமான். 2010ல் கட்சி ஆரம்பித்து இதுவரை ஒரு எம்எல்ஏ கூட வெற்றிப்பெறாத நிலையில், இனிமேலும் ஜெயிப்பாரா என்ற தெரியாத நிலையில், ‛‛போகிற போக்கில் சும்மா அடிச்சு விடுவோம்'' என்று சீமான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது நாம் தமிழர் அன்பு தம்பிகளுக்கு.

Advertisement