வீட்டில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: மணிப்பூரில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

இம்பால்:மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்; தாய் படுகாயம் அடைந்தார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடி இனத்தவர் இடையே மோதல் வெடித்து இனக்கலவரமாக மாறியது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியால் அங்கு தற்போது மோதல் கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் மெய்டி இனத்தவர் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரங் டிரோங்லோபி பகுதியில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் சிலர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில் அங்கு துாங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மற்றும் ஆறுமாத பெண் குழந்தை உயிரிழந்தனர்; தாய் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு ஆயில் டேங்கர்கள், ஒரு லாரிக்கு தீ வைத்து எரித்தனர். மேலும் அருகேயுள்ள தற்காலிக போலீஸ் நிலையத்தையும் அவர்கள் சூறையாடினர்.

இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் கூகி இன பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, பிஷ்ணுபூரை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement