தி.மு.க.,வில் வாரிசுகளுக்கே 'சீட்' ;செல்வகுமார் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தி.மு.க.,வில் வாரிசுகள், பணபலம் படைத்தவர்கள், குவாரி வைத்திருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ., சீட் வழங்கப்படுகிறது என அக்கட்சியில் இருந்து விலகிய பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

விஜயின் மேலாளராக பணியாற்றிய செல்வகுமார், அவரிடம் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து செயல்பட்டார்.

பின் கலப்பை மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமூக சேவைகளில் ஈடுபட்டவர், தி.மு.க.,வில் இணைந்தார்.

தி.மு.க.வில் அவருக்கு மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அது நடக்காததால் தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினார்.

அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு என்னை 'சப்போர்ட்' செய்யும் கட்சிக்கே எனது ஆதரவு. ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்வோருக்கு என் ஆதரவு இருக்காது. தேசிய கட்சிகளிடம் இருந்து எனக்கு போன் வருகிறது. நான் சர்வீசில் ஜெயித்துவிட்டேன். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன். யார் யாரெல்லாமோ ஒரு சீட் வாங்கிட்டாங்க. நேற்று வந்த பன்னீர்செல்வத்துக்கு ஒரு சீட் கிடைக்கிறது.

கன்னியாகுமரி தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தான் சீட் என முதல்வர் பேசினார். சர்வீசில் சிறந்தவர் என்று உளவுத்துறை ரிப்போர்ட்டில் எனது பெயர் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தி.மு.க.,வில் வாரிசுகள், பணபலம் படைத்தவர்கள், குவாரி வைத்திருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ., சீட் வழங்கப்படுகிறது.மாற்றம் வரும் என்று தான் தி.மு.க.,வில் சேர்ந்தேன். ஆனால் நான் ஏமாற்றப்படுவது இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது என்றார்.

Advertisement