நெடுஞ்சாலை குப்பைகளில் தீ ;வாகன ஓட்டிகள் கடும் அவதி

திண்டிவனம்: திண்டிவனம் - சென்னை சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

திண்டிவனம் நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பதற்கு போதுமான இடம் இல்லை.

இதனால் துாய்மைப் பணியாளர்கள் மூலம் நகரத்திலுள்ள 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரம் கண்ட இடங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.

இதேபோல் திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் தீ வைத்து எரிக்கின்றனர்.

இதனால், ஏற்படும் புகை மூட்டம் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் செல்லும் பயணிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. புகை மூட்டம் கண்ணை மறைக்கும் அளவிற்கு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நகராட்சி சுகாதார அதிகாரிகள், நெடுஞ்சாலையில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement