மாவட்டத்தில் 218 மனுக்களில்...  160 ஏற்பு! 7 தொகுதிகளில் 43 தள்ளுபடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 218 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடந்த பரிசீலனைக்குப் பிறகு, 7 தொகுதியிலும் 160 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்காக, மார்ச் 30ம் தேதி துவங்கி, மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 7 தொகுதிகளிலும் மனு தாக்கல் நடந்தது. 6ம் தேதி நிறைவு நாளில் 218 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.

செஞ்சி தொகுதியில், 38 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனைக்குப் பிறகு 8 மனுக்கள் தள்ளுபடியானது, இதில், 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. மீதமுள்ள 19 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

மயிலம் தொகுதியில் 26 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 3 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. மொத்தம் 22 மனுக்கள் ஏற்கப்பட்டது.

திண்டிவனத்தில் 16 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டது. ஒரு மனு ஜாதிச்சான்றிதழ் இணைக்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வானுார் (தனி) தொகுதியில் 26 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் 16 மனுக்கள் ஏற்கப்பட்டது.

விழுப்புரம் தொகுதியில் 37 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருவர் மனுவை திரும்ப பெற்றார். இதையடுத்து 25 மனுக்கள் ஏற்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் 34 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 31 மனுக்கள் ஏற்கப்பட்டது.

திருக்கோவிலுார் தொகுதியில் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 19 மனுக்கள் ஏற்கப்பட்டது.

மாவட்டம் முழுதும் மொத்தம் 218 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 43 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 15 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் சேர்த்து 160 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் திண்டிவனம் தொகுதியில் குறைந்தபட்சமாக 15 மனுக்களும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 31 மனுக்களும் தகுதி பெற்றவையாக ஏற்கப்பட்டுள்ளது.

Advertisement