ஓட்டுப்பதிவுக்கு முந்தைய வழிமுறைகள் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்: ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் தேர்தல் அலுவலர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், தேர்தல் அலுவலர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும். ஓட்டு சாவடியை சுற்றி, 100 மீட்டருக்குள் அரசியல் விளம்பரங்களோ, கட்சி கொடிகளோ அல்லது கட்சி சார்ந்த பந்தல்களோ இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டு சாவடிக்குள் ஏதேனும் அரசியல் தலைவர்களின் படங்கள் இருந்தால், முழுமையாக மூடிவிட வேண்டும். வாக்காளர்கள் தங்களுடைய மொபைல் போன்களை வைப்பதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, சரி பார்க்க வேண்டும். வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தால், அது வாக்குப்பதிவு ரகசியத்தை பாதிக்காத நிலையில், அதே சமயம் முழு நிகழ்வையும், கண்காணிக்கும்படி உள்ளதா என, பார்த்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் ஓட்டுப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் வி.வி.பேட்டை இயக்கவோ அல்லது சோதிக்கவோ கூடாது. அனைத்து இயந்திரங்களும் தேர்தல் அலுவலரின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றை தேர்தல் நடக்கும் மையத்தை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.தேர்தல் தொடர்பாக அனைத்து அலுவலர்களும் மற்றும் காவலர்கள் வந்துவிட்டனரா என, பார்த்துக் கொள்ள வேண்டும்.

வராத சூழ்நிலையில் மண்டல அலுவலருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement