ஜெயிக்க உதவும் சமூக ஊடகங்கள்!
'கேக்' தயாரிப்பு தொழிலில் அசத்தும், சென்னையை சேர்ந்த, 22 வயதான ஜனனி கிருஷ்ணன்:
சிறு வயது முதலே எனக்கு சமையலில் ஆர்வம் உண்டு. அதிலும், கேக் போன்ற பேக்கரி உணவுகள் தயாரிப்பதில் கூடுதல் விருப்பம். பிளஸ் 1 படிக்கும்போதே, கேக் தயாரிக்க நன்கு கற்றுக் கொண்டேன்.
என் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாள் வருகிறது என்று தெரிந்தால், அவர்களிடம் ஆர்டர் வாங்கி, கேக் செய்து கொடுப்பேன். அப்படி விளையாட்டாக ஆரம்பித்தது தான், இந்த தொழில்.
சமையல் ஆர்வத்தால், அது தொடர்பான இளங்கலை படிப்பு முடித்தேன்.
ஆர்வமும், திறமையும், முறையான படிப்பும் இருந்தாலும், நான் வெளியில் அதிகமாக யாரிடமும் பேசி பழகியது இல்லை. என் கூச்ச சுபாவத்தை உடைத்து, வெளியில் கொண்டு வந்தது, சமூக ஊடகங்கள் தான்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், நாம் செய்யும் தயாரிப்புகளை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சமூக வலைதளங்களில், 'ஜன்பன் பைட்ஸ்' என்ற பக்கம் ஒன்றை ஆரம்பித்து, பதிவிட ஆரம்பித்தேன்.
அதை பார்த்து, சிலர் ஆர்டர் கொடுக்கவே, வீட்டில் இருந்து கேக் செய்யும் தொழில் துவங்கியது.
பெற்றோரின் ஆதரவு தான் என்னை வளர்த்தது. அப்பா, வீட்டில் கேக் செய்வதற்கான வசதிகளை செய்து கொடுத்தார்; அம்மா என் வியாபாரத்திற்கு பக்கபலமாக இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆர்டர்கள் அதிகரிக்கவே, நான் சம்பாதித்த பணத்திலேயே, சென்னை, அடையாறு பகுதியில், 'ஜன்பன் பைட்ஸ்' உணவகம் துவங்கினேன். இப்போது கலகலப்பான பெண்ணாக மாறி விட்டேன். தயக்கம் இல்லாமல், எல்லாரிடமும் பேசுகிறேன்.
உணவக வாழ்க்கையில் நேரடியாக வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். நேர கட்டுப்பாடு, நிர்வாக அழுத்தம் எல்லாம் இருந்தாலும், அதெல்லாம் சுகமான சுமைகளாகத் தான் இருக்கின்றன.
நல்ல அர்ப்பணிப்புள்ள குழுவும் எனக்கு அமைந்திருக்கிறது. அவசரமான ஆர்டர்கள், அதிகமான ஆர்டர்கள் வரும்போது, ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து, வேலைகளை பிரித்து, சரியான நேரத்திற்கு முடிக்கிறோம்.
வாடிக்கையாளர்களின் தேவைகள், கேக் தயாரிப்பில் புதிய முயற்சிகள் என, ஒவ்வொன்றையும் அனுபவங்களாகவே எடுத்துக் கொள்கிறேன். இழப்புகள், நஷ்டங்கள், தோல்விகள் இல்லாத தொழில் பயணம் எதுவும் இல்லை. அவை, நாம் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்.
சமூக ஊடகங்கள் என் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகின்றன. சமூக ஊடகங்களை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால், அனைவரும் ஜெயிக்கலாம்!
தொடர்புக்கு: 82204 03896
மேலும்
-
சவூதி - பஹ்ரைன் இடையிலான கிங் பஹத் பாலம் மீண்டும் திறப்பு!
-
உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது; நெல்லை பிரசாரத்தில் விஜய் பேச்சு
-
திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு