இரட்டை விரல் காண்பித்த தொண்டர்கள் கனிமொழி பிரசார கூட்டத்தில் கலகலப்பு

திருவொற்றியூர்: கனிமொழி பிரசார கூட்டத்தில், இரட்டை விரல் காண்பித்தவர்களால், கலகலப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, தி.மு.க., பொது செயலர் கனிமொழி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, கனிமொழி பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலில், மகளிர் உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். எதிர்கட்சியினர் வழங்கவே முடியாது என்றனர். ஆனால், 1.31 கோடி பெண்கள் அந்த தொகையை பெற்று வருகின்றனர்.

''மீண்டும் தி.மு.க., ஆட்சி தான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தலைவர் எவ்வளவு தருவதாக கூறியுள்ளார் தெரியுமா,'' என்றார். என, தொண்டர்களை பார்த்து கேட்டார். அப்போது சிலர், இரட்டை விரல்களை உயர்த்தி காண்பித்தனர்.

சுதாரித்த கனிமொழி, ''தி.மு.க., கூட்டத்தில் என்ன செய்கிறீர்கள். இரட்டை விரலை காண்பிக்கிறீர்கள்,'' என்றதும் குபீர் சிரிப்பலை கிளம்பியது.

ஆனால், ''இனிமேல் இரட்டை விரல் என்பது, தி.மு.க., கொடுக்க போகும், 2,000 ரூபாயை தான் குறிக்கும்,'' என்று கனிமொழி சமாளித்தார்.

Advertisement