செயல்படுத்திய திட்டங்களை சுட்டிக்காட்டி ஆலந்துாரில் அமைச்சர் அன்பரசன் பிரசாரம்

ஆலந்துார்: ஆலந்துாரில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்களை சுட்டிக்காட்டி, தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் அன்பரசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் அன்பரசன், 66. கடந்த 2006, 2016 மற்றும் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2021ல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சராக உள்ளார். நான்காவது முறையாக போட்டியிடும் அமைச்சர் அன்பரசன், நேற்று ஆலந்துார் பகுதியில் தொண்டர்கள் புடைசூழ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்.

பின், அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:

ஆலந்துாரை பொறுத்தவரை, கடந்த ஐந்தாண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கொண்டு வரப்பட்டது. அதற்கான புதிய கட்டடம் கட்ட, மவுன்ட் -பூந்தமல்லி சாலையில், 2.18 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 22.10 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பரங்கிமலை பகுதியில், 13.35 கோடி ரூபாயில் தோழி விடுதி அமைக்கப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாயில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. ஆலந்துார் மண்டலம் முழுதும், 122.63 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை புனரமைப்பு திட்டம்; கத்திப்பாரா மேம்பாலம் கீழ், 14.50 கோடியில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

30 கோடி ரூபாயில் சமுதாய நலக்கூடங்கள், நவீன திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஐந்தாண்டுகளில், 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, ஆலந்துாரில் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். இம்முறை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எங்கள் குறிக்கோள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement