ஐ.பி.எல்., போட்டிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதிகள் அறிவுரை

1

சென்னை: ஐ.பி.எல்., போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், ஏப்., 4 மற்றும் 11ம் தேதிகளில், சி.எஸ்.கே., எனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் இரண்டு ஐ.பி.எல்., போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த போட்டிகளை, தேர்தல் முடிந்த பின் நடத்தும்படி, ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு அறிவுறுத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டி.பிரபாகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தெரிவித்ததாவது:

ஒரு போட்டி ஏற்கனவே முடிந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. நீங்களும் அந்த போட்டியை பார்த்தீர்கள் இல்லையா; அதை ரசித்தீர்கள் இல்லையா... அதனால், இரண்டாவது போட்டியையும் கண்டு ரசியுங்கள்.

மேலும், நடவடிக்கை எடுப்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பாகும். தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏதேனும் விதிமீறல் நிகழ்ந்தால், நீங்கள் தேர்தல் கமிஷனை அணுகலாம்.

மனுவில், 'எவ்வித விதிமீறலும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, கோரப்பட்டு உள்ளது. வெறும் யூகம் மற்றும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Advertisement