பைக்கில் எடுத்து சென்ற ரூ.34.70 லட்சம் சிக்கியது

திருவொற்றியூர்: உரிய ஆவணங்களின்றி, பைக்கில் எடுத்து சென்ற 34.70 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவொற்றியூர், பேசின் சாலை, கரிமேடு சந்திப்பில், நேற்று மதியம் மாநகராட்சி உதவி பொறியாளர் கணேஷ் தலைமையிலான, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 'ஹோண்டா ஷைன்' பைக்கில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது, அவர் கொண்டு வந்திருந்த பையில், 34.70 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பிடிப்பட்டவர் திருவொற்றியூர் சக்தி கணபதி நகரைச் சேர்ந்த வேதநாதன், 22, என்பதும், ஏ.டி.எம்., மிஷின்களுக்கு பணம் நிரப்புவதற்காக, வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., சாலையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்ததாக கூறினார்.

இருப்பினும், உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் ஒப்படைத்தனர்.

அண்ணா நகர், சாந்தி காலனி, நான்காவது அவென்யூவில், தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 'டொயோட்டா' காரை நிறுத்தி சோதித்தனர்.

அதில், உரிய ஆவணமின்றி, 30 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. காரில் அண்ணா நகர், நான்காவது அவென்யூவில் உள்ள தேவ் ஆட்டோ மொபைல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேஸ்டின், 48, இமானுவேல் பாலசிங் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது.

நிறுவன ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சம்பள தொகை என தெரிந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலகத்தின் வாயிலாக, வரிமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement