தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,; கோவை குறுந்தொழில் சங்க தலைவர் தவம்

6


கோவை: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் கோவை கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க தலைவர் 2 ஆண்டுகளாக தலைமுடி, மீசை எடுக்காமல், தவக்கோலத்தில் மாறியுள்ளார்.


கோவை மாவட்டம் கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் (கோஜிம்வா) தலைவர் திருமலை ரவி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கிரில் உற்பத்தி சார்ந்து 3,600 நிறுவனங்கள் உள்ளன. கோவை மாநகர், மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர் என்று மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளோம். கிரில் உற்பத்திக்காக சிட்கோ பூங்கா அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகிறோம்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவையில் தொழில்துறையினருடன் உரையாடினார். கோவைக்காக தனி தேர்தல் அறிக்கையும் தி.மு.க., வெளியிட்டது. அதில் கோவையில் கிரில் தயாரிப்புக்கு பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். பூங்கா அமைந்தால், சொந்தமாக தொழிற்கூடம் இல்லாதவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்தோம்.



அதை 2025 நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றுவோம் என்றனர். பலமுறை நினைவூட்டியும் செயல்படுத்தவில்லை. எங்களுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட் தொடர்ச்சியாக கேட்கிறோம். எங்களில் 90 சதவீத நிறுவனங்கள் வாடகை கட்டடத்தில் தான் உள்ளோம். மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.


மின்சாரத்துக்குநிலைக்கட்டணம் நிர்ணயித்திருப்பதால், நாங்கள் பயன்படுத்தாவிடினும் மின் கட்டணம் கட்டியாக வேண்டும். மூலப்பொருட்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு கூட, பணம் கொடுக்க முடியாதளவுக்கு நெருக்கடியில் உள்ளோம். மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.



கிரில் உற்பத்தியில் ஒரு லட்சம் தொழில்முனைவோர், 6 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறோம். எங்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கேட்டோம். 2024 தேர்தல் வாக்குறுதியிலேயே குறிப்பிட்டதால், எப்படியும் கிரில் பூங்கா வந்துவிடும் என்று நான் உறுதியாக நம்பினேன். கிரில் பூங்கா அமைந்த பிறகு தான் என்னுடைய தலைமுடி, மீசை, தாடி எடுப்பேன் என்று எங்கள் உறுப்பினர்களிடம் சொன்னேன். 2 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.


விரக்தியில் நானும் 2 ஆண்டுகளாக தலைமுடி, தாடி வெட்டவில்லை. இப்போது பார்ப்பதற்கு, 'அகோரி' போல மாறிவிட்டேன். கடந்த 2025 செப்டம்பரில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேறவில்லை. நிறைய போராடி சோர்ந்துவிட்டோம். கிரில் பூங்கா அமைக்கும் வரை தலை முடி மற்றும் தாடி எடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். தேர்தல் முடிந்த பிறகாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, திருமலை கூறினார்.

Advertisement