விவசாயிகளுக்கு கனவாகி போன காய்கனி வழித்தடங்கள்

3

உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சில, அரசாணையோடு நின்று விட்டன. சட்டசபையில் அறிவித்து, முழுமையாக செயல்பாட்டிற்கு வராத திட்டங்களின் விபரம்:


* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால், ஆண்டுக்கு 40 லட்சம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ் அனுப்பப்படுகின்றன. இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கும், வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பும் வகையில், குறைந்த துாரத்தில் உகந்த வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத் துறையால் முழுதுமாக செயல்படுத்தப்படும். இதனால், ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் சென்றடையும்

* பொது வினியோக திட்டம் தொடர்பான அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட, துறையில் மின் அலுவலக செயலாக்கத்தை, 100 சதவீதம் நடைமுறைப்படுத்திட ஏதுவாக, போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின் உருவாக்க கருவிகள், தமிழக மின்னாளுமை முகமை வாயிலாக வழங்கப்படும்

* நுகர்வோர் தங்கள் குறைகளை வலைதளத்தில் எளிதில் பதிவு செய்திட, தனித்துவம் வாய்ந்த நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்படும்

* தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய 20 எண்ணிக்கையிலான, மொத்தம், 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 399.19 கோடி ரூபாயில் கட்டப்படும்

* உணவு தானியங்களை பாதுகாப்பாக வைக்கவும், விளைபொருட்கள் மீது உடனடி ஈட்டுக்கடன் வசதி பெறவும், விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 25,000 டன் கொள்ளளவுடன் நவீன தானிய சேமிப்பு கிடங்குகள், கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக கட்டப்படும்

* உணவுப் பொருட்களின் தரத்தை பாதுகாக்க ஏதுவாக, கூட்டுறவு இணையத்தின் குளிர்பதன கிடங்குகள் நவீனமயமாக்கப்படும்

* நுகர்வோருக்கு தரமான காய்கறிகள், பழங்கள் நியாயமான விலையில் கிடைக்க ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில், காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி விளையும் ஊட்டி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து, அங்காடிகளுக்கு கொண்டு சேர்த்திட சிறப்பு காய்கனி வழித்தடங்கள் உருவாக்கப்படும். இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் காய்கனிகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்

* அனைத்து கூட்டுறவு விற்பனை சங்கங்களும், அந்தந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, அப்பொருட்களின் மதிப்பு கூட்டப்பட்டு, நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில், பதனிடும் சங்கங்களாக மேம்படுத்தப்படும்

* ரேஷன் கடைகளுக்கு விரைவாகவும், உரிய நேரத்திலும், சரியான அளவிலும், பொருட்களை கிடங்குகளில் இருந்து எடுத்துச் செல்வதை உறுதி செய்து, மேலாண்மை செய்வதற்காக, ஜி.பி.எஸ்., எனப்படும் புவியிடங்காட்டியுடன் கூடிய, 'இ - வழித்தடம்' ஏற்படுத்தப்படும்

* வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக, சிறுதானியங்கள் கொள்முதல் செய்யவும், சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement