வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! அடுப்புக்கரி, விறகுக்கு விலை அதிகரிப்பு

சிவகாசி:சிவகாசி பகுதியில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல், டீக்கடைகள் அடுப்புக்கரிக்கு மாறிய நிலையில் அடுப்புக் கரியும் விறகும் 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளதால் கடைகளின் உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி திருத்தங்கல் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல், டீக்கடைகள் உள்ளன. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் இப்பகுதிகளில் ஓரளவிற்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் கிடைத்ததால் அனைத்து கடைகளும் இயங்கி வந்தன. இந்நிலையில் இரு வாரமாக இப்பகுதியில் வணிக சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மையான ஓட்டல்கள், டீக்கடைகள் பல நாட்கள் அடைக்கப்பட்டு சிலிண்டர் கிடைத்தவுடன் சில நாட்கள் திறக்கப்படுவதுமாக உள்ளன.

இதனால் பெரும்பான்மையான கடைகள் அடுப்புக்கரிக்கு மாறிவிட்ட நிலையில் அதன் விலையும் ஏறிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு அடுப்புக்கரி ஒரு மூடை ரூ. 1600 க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 2200 வரை விற்கப்படுகிறது. விறகு ஒரு டன் ௹.6000 த்திற்கு விற்ற நிலையில் தற்போது ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான கடைகளில் உணவு ஐட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டுள்ளது. எனவே வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என இப்பகுதி ஓட்டல், டீக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement