போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் சரிந்தது!

11

புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர், தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை நேற்று உடனடியாக 15 சதவீதத்துக்கு மேல் சரிந்து, மீண்டும் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டாலருக்கு கீழ் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீதான ராணுவ தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு முக்கிய நிபந்தனையாக, சர்வதேச எண்ணெய் வினியோகத்தில், 20 சதவீத பங்கு வகிக்கும் 'ஹார்முஸ்' ஜலசந்தியை ஈரான் முழுமையாக திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு ஈரான் சம்மதித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக சரிந்தது.


மிகப்பெரிய நிவாரணம்




இதையடுத்து, 'பிரென்ட்' வகை கச்சா எண்ணெய் விலை நேற்று மாலை நிலவரப்படி 15 சதவீதம் சரிந்து, 91.50 அமெரிக்க டாலராக குறைந்தது; இது, நேற்று முன்தினம் 109 டாலராக இருந்தது. இதேபோல், அமெரிக்க டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வீழ்ந்து, 91.05 டாலராக குறைந்தது.

கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நம் நாட்டுக்கு, இது மிகப்பெரிய நிவாரணமாகும். இதனால், நாட்டில் பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.


அச்சம் நீங்கியுள்ளது




சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்த போதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தற்போது சர்வதேச விலை சரிந்துள்ளதால், இனி பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்ற அச்சம் நீங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், சரக்கு கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் முதல், சில மாதங்கள் வரை ஆகலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

@block_B@

எம்.சி.எக்ஸ். சந்தையில் 18% சரிவு



போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடன், முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை அவசர அவசரமாக விற்க துவங்கியதால், எம்.சி.எக்ஸ். எனப்படும் 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்'சில், கச்சா எண்ணெய் மீதான முதலீட்டிற்கான விலை 18 சதவீதம் சரிந்தது. ஏப்ரல் மாத முதலீட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் பேரல் ஒன்றுக்கு 10,990 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் 8,594 ரூபாயாக குறைந்தது. மே மாதத்திற்கான ஒப்பந்தம் 8,012 ரூபாயாக உள்ளது. போர் துவங்குமுன், பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் விலை 6,106 ரூபாயாக இருந்தது. போர் பதற்றம் காரணமாக 80 சதவீதம் வரை விலை உயர்ந்த நிலையில், தற்போது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.block_B

Advertisement