வழிப்பறி செய்த இருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை காஞ்சி நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: நகை, பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்த வழக்கில், இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, காஞ்சிபுரம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் அடுத்த கம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்க திருப்பதி. இவர், தனது மனைவி தெய்வகனியுடன், கடந்த 2011ல், காவாந்தண்டலம் - வாலாஜாபாத் சாலையில், 'பஜாஜ் பிளாட்டினா' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே அவர்களை நிறுத்திய மூவர், கத்தியை காட்டி, அவர்களிடம் இருந்த நகை, பணம், மொபைல் போன் என, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழிப்பறி செய்தனர்.

இதுகுறித்து, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, படப்பை அருகே உள்ள கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 31, கார்த்திக், 23 மற்றும் வேம்புலி, 45. ஆகிய மூவரையும் போலீசார் பிடித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, குற்றவாளி ராஜேஷ் இறந்ததால், மற்ற இருவர் மீதும் வழக்கு விசாரணை நடந்தது. காஞ்சிபுரம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கார்த்திக் மற்றும் வேம்புலி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என, நீதிபதி அருண்சபாபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் ரமேஷ்குமார் வாதாடினார். இரு குற்றவாளிகளுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement