நாராயணபுரம் ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் உடல் மீட்பு

பள்ளிக்கரணை;பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் சாய்ராம், 24. உணவு டெலிவரி ஊழியரான இவர், செவ்வாய் கிழமை நள்ளிரவு, நண்பர் நவீன்குமாருடன், 25, நாராயணபுரம் ஏரி கால்வாய் மீது அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது, சாய்ராமின் மொபைல்போன் ஏரியில் தவறி விழுந்தது. அதை தேடி ஏரிக்குள் குதித்த அவர், நீரில் மூழ்கி மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் நவீன்குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் பொக்லைன் உதவியுடன் மூழ்கிய சாய்ராம் உடலை தேடினர். ஆனால், நேற்று முன்தினம் இரவு வரை உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவரது உடல் வடிகால்வாயில் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்த தீயணைப்பு வீரர்கள், ஏரி நீரை தடுத்து, நான்கு ராட்சத மோட்டார்கள் மூலம் வடிகால்வாய் நீரை இறைத்தனர்.

தொடர்ந்து, நேற்று அதிகாலை, வடிகால்வாயினுள் சிக்கியிருந்த சாய்ராம் உடல் மிதந்து வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நவீன்குமார் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement