அயர்லாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு

புதுடில்லி: ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2024ம் ஆண்டின்படி 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

உயர்கல்வித் துறையில் முன்னோடியாக திகழும், 'ஒன்ஸ்டெப் குளோபல்' என்ற நிறுவனம் சமீபத்தில், 'இந்திய மாணவர்களின் வெளிநாடு தேர்வு' என்ற தலைப்பில் பெற்றோர், மாணவர்கள் என பல தரப்பினரிடம் ஆய்வு நடத்தியது.

இதில், இந்திய மாணவர்களின் ஆர்வம், அயர்லாந்தின் மீது 38 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 700லிருந்து 9,000க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

உலகளவில் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனின் கடுமையாக்கப்படும் விசா விதிமுறைகளும் அமெரிக்காவில் நிலவும் கட்டுப்பாடுகளும், அயர்லாந்தின் பக்கம் மாணவர்களின் கவனத்தை திருப்பியுள்ளன.

எனினும், அங்குள்ள கல்வி நிலையங்கள், பாடப்பிரிவுகள், உட்கட்டமைப்பு வசதிகள், நம் நாட்டை மையமாக கொண்ட வலுவான தகவல் தொடர்பு ஆகியவற்றையும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா கொள்கைகள் மட்டுமின்றி தற்போது உலகளவில் நீடிக்கும் பாதுகாப்பின்மை, அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்டவற்றால் இந்திய மாணவர்களின் தேர்வாக அயர்லாந்து அமைந்துள்ளது. இதுதவிர, அந்நாட்டின் கல்வி முறை, குறுகிய கால படிப்புகள், படிப்புக்கு பிந்தைய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை இருப்பு ஆகியவை நம்பகமான தேர்வாகவும் விளங்குகிறது.

Advertisement