வாடகை பாக்கியை கேட்ட ஆத்திரத்தில் பெண் கொலை பெயின்டருக்கு 'ஆயுள்'

சென்னை: வாடகை பாக்கியை கேட்ட வீட்டின் உரிமையாளரின் மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர், 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன், 69. இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பெயிண்டர் நாராயணன், 56, ஆறு மாதமாக வாடகை பாக்கி வைத்துள்ளார். சந்திரமோகனிடம் கடனாக 80,000 ரூபாய் பெற்று உள்ளார்.

வாடகை பாக்கி மற்றும் கடனை கேட்டு தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட தகராறில், சந்திரமோகனை, கத்தியால் நாராயணன் குத்தினார். தடுக்க வந்த அவரது மகன் சதீஷ், மருமகள் சுகன்யா ஆகியோரை கத்தியால் குத்தினார்.

இதில், சுகன்யா உயிரிழந்தார். காயமடைந்த சந்திரமோகன், சதீஷ் ஆகியோர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, நாராயணனை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போலீசார் சார்பில் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.பிரபாகரன், 'நாராயணன் மீதான கொலை குற்றச்சாட்டை, சந்தேகத்துக்கு இடமின்றி போலீசார் நிரூபித்துள்ளனர். இதனால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என, தீர்ப்பளித்தார்.

Advertisement