விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்

10

மதுரை: விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


மதுரையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நிறைய பேர் உழைப்பு, ரத்தம், வியர்வை. அது லீக் ஆகிவிட்டது. அதில் ஒருவர் எனக்கே மெசேஜ் போட்டு இருந்தார். படம் வந்த பிறகு தியேட்டரில் போர் பார்ப்போம். இல்லையென்றால் அவர்கள் ஓடிடியில் வெளியிட்ட பிறகு போய் பார்ப்போம். முறையாக போய் பார்ப்போம். இந்த நேரத்தில் இது நடந்து இருக்க கூடாது.



முறையான விசாரணை நடத்தி எங்கு இருந்து லீக் ஆனதோ, அதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் சிபிஐ நோக்கியும் போகட்டும். இதில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். யாரும் லீக் ஆன படத்தை பார்ப்பதை தவிருங்கள். சினிமா தியேட்டரில் போய் பாருங்கள். உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்போம்.


விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் ஒரு கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை முழுமையாக போலீசாருக்கு சொல்ல முடியாது.

விஜயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் முக்கியம் சைக்கிளில் வருகிறார், யாரோ மாலையை போட்டு இழுத்தார்கள், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிரசாரத்திற்கு வரும் தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர் சொல்ல கூடிய கருத்தை சொல்ல வேண்டும்.


இவ்வளவு ரோடு ஷோ பண்ணி, காரைக்குடியில் அவரால் பேச கூட முடியவில்லை. பிரசாரத்தில் விஜய் பேச வேண்டும். பிரசாரத்தை எல்லோரும் சூடாக செய்து கொண்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்; களம் எங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

விஜய் அவருடைய கட்சி, ஓட்டு கேட்கிறார். யார் விஜய்க்கு போட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போகிறார்கள். திமுகவை மக்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், தேஜ கூட்டணி வேண்டும் என்று தான் சொல்வார்கள், அது தான் கள நிலவரம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement