பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!

9

நமது சிறப்பு நிருபர்




தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி மீது கோபக்கணைகளை வீசுகிறார். ஆனால் மகன் அன்புமணி பாசத்தைக் காட்டி பரிதவிக்கிறார்.

ராமதாசுக்கு தெரியாமல் தேர்தல் ஆணையத்திற்கு ஏதேதோ ஆவணங்களைக் கொடுத்து கட்சியையே கைப்பற்றிக்கொண்டார் அன்புமணி. கட்சி கையை விட்டு போன பிறகு தான் ராமதாசுக்கு விஷயமே தெரிய வந்தது. அதன் பிறகு கோபத்தில் கொந்தளித்த ராமதாஸ், மகன் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதும், அவர் இடத்தில் புதிய நிர்வாகியை நியமிப்பதும், எனது பெயரை இனிமேல் அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பதுமாக ஏகப்பட்ட எச்சரிக்கைகளை விடுத்தார்.

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் அன்புமணி தனது அப்பாவை மரியாதை குறைவாக எங்கும் பேசவில்லை. அப்பா மீது பாசம் இருப்பதாக தொடர்ந்து காட்டிக்கொள்கிறார். தந்தை ராமதாஸை 'ஐயா' என்றே கூப்பிடும் அன்புமணி, அவரை சுற்றியுள்ளவர்கள் தான் தந்தையை தவறாக வழிநடத்துவதாக பேசி வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், ''ஐயாவிற்கு யாரையும் புண்படுத்தத் தெரியாது.

அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். சில நேரங்களில் அவருக்குத் தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன'', ''தவறான நபர்களின் ஆலோசனைகளால் கட்சி பின்னடைவைச் சந்திக்கிறது'', ''ஐயா எனக்குத் தந்தை மட்டுமல்ல, தெய்வம். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் கஷ்டப்பட்டதெல்லாம் போதும், இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறேன்'', ''எங்கள் உறவு அரசியல் கடந்தது; ஒரு மகனாக ஐயாவைப் பாதுகாப்பது என் கடமை'', என்றெல்லாம் பேசினார்.



அதே நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியை கடுமையாக விமர்சித்தே வருகிறார். ''என்னைத் தைலாபுரம் தோட்டத்தில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப் போலச் சிறை வைத்துவிட்டார்கள்'', ''அன்புமணி இப்போது எதையும் கேட்டு நடப்பதில்லை; அவராகவே எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்'', ''கட்சியில் பதவி வாங்கிக் கொண்டு வேலை செய்யாதவர்களை அன்புமணி தட்டிக்கேட்பதில்லை.
அவர் எல்லோரையும் அரவணைத்துப் போகிறேன் என்று சொல்லி, கட்சியை மழுங்கடிக்கிறார்'',
''நான் தெருவில் இறங்கிப் போராட நினைக்கிறேன், ஆனால் அன்புமணி என்னை உட்காரச் சொல்கிறார். அவருக்கு என் உடல்நிலை மீது அக்கறை இருக்கலாம், ஆனால் கட்சியின் வீரியம் குறையக்கூடாது'', ''அரசியலில் நிதானம் வேண்டும், அவசரம் கூடாது.



இன்னும் சிலருக்கு (அன்புமணியைக் குறிப்பிட்டு) பழுத்த அரசியல் அனுபவம் வரவில்லை'' என்று சாடுகிறார். நேற்று சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது ராமதாஸ் மயக்கம் அடைந்தார். இது பற்றி கேள்விப்பட்ட அன்புமணி மீண்டும் பாசத்தில் பொங்கினார். ‛‛ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அவரைச் சுத்தி இருக்கிறவங்களை சும்மா விட மாட்டேன்'' என்று எச்சரிக்கை விட்டுள்ளார்.
‛‛இவ்வளவு பாசம் இருப்பவர் ஏன் அப்பாவை தவிக்க விட்டு தனியே வந்தார். கட்சியை ஏன் கைப்பற்றினார். தனியாக ஏன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்'' என்று கேள்விகளை ராமதாஸ் ஆதரவாளர்கள் அடுக்குகின்றனர். இப்படி அப்பாவும் மகனும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வது அக்கட்சியினருக்கும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement