சுவாமி பல்லக்குடன் வந்த டிராக்டர் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி 

ஹுலிமாவு: கோதண்ட ராம சுவாமி இருந்த பல்லக்கை சுமந்து வந்த, டிராக்டர் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

பெங்களூரு ஹுலிமாவில் வசித்தவர் அக் ஷத், 28. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. இதனால், சில தினங்களாக உறவினர் வீடுகளுக்கு சென்று, திருமண பத்திரிகை கொடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஹுலிமாவில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு, பத்திரிகை கொடுக்க சென்றார். அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள கோதண்ட ராமசுவாமி கோவில் ஆண்டு திருவிழாவை ஒட்டி, கோதண்ட ராம சுவாமி வீற்றிருந்த பல்லக்கை சுமந்தபடி டிராக்டர் ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பல்லக்கை பார்க்கும் ஆர்வத்தில் அக் ஷத் அங்கு சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது டிராக்டர் மோதியது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். டிராக்டரை ஓட்டியவரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement