காது கேட்காதவரை கொலை செய்த மாற்றுத்திறனாளிகள் இருவர் கைது

மைசூரு: காது கேளாத, பேச்சு வராத மாற்றுத்திறனாளியை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, மைசூரு எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதன்டி அளித்த பேட்டி:

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா, தேவரம்மனஹள்ளி பாளையா கிராமத்தில் வசித்தவர் சாமி, 30. காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், தன்னை போன்றே மாற்றுத்திறனாளியான சவிதாவை, நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார்.

தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் அன்யோன்யமாக வசித்தனர். இதற்கிடையே துமகூரு மாவட்டம், குனிகல்லை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாஸ், 37, என்பவர், சவிதாவுக்கு அறிமுகமானார். அத்துடன், சவிதாவின் கணவர் சாமியுடனும் நட்பாக பழகினார்.

சீனிவாஸ், சவிதா மீது கண் வைத்தார். இவரை தன்னுடையவராக்க வேண்டும் என்ற நோக்கில், சாமியை கொலை செய்ய திட்டமிட்டார்.

நடப்பாண்டு பிப்ரவரி, 12ம் தேதியன்று, கூட்டாளிகளுடன் சேர்ந்து, சாமியை அழைத்து சென்று மதுபானம் குடிக்க வைத்து, கழுத்தில் அடித்து கொலை செய்தார். உடலில் கல்லை கட்டி, குனிகல்லின் அம்மத்துாரில் உள்ள கிணற்றில் போட்டனர்.

கட்டட கட்டுமான பணிக்கு செல்வதாக கூறி சென்ற கணவர், பல நாட்களாகியும் வீடு திரும்பாததால், மார்ச், 4ல் நஞ்சன்கூடு ஊரக போலீஸ் நிலையத்தில் சவிதா புகார் அளித்தார்.

போலீசாரும் விசாரணையை துவக்கினர். சவிதாவுடன் சைகை மூலம் வீடியோ காலில் பேசிய சீனிவாசின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சீனிவாசுக்கும் வாய் பேச முடியாது, காதும் கேட்காது. இவரது சைகை பேச்சுகளை புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. வல்லுனர்களின் உதவியுடன் விசாரித்த போது, சீனிவாஸ் கொலையாளி என்பது தெரியவந்தது.

சீனிவாஸ் உட்பட இருவரை கைது செய்துள்ளோம். மற்றொருவரை தேடி வருகிறோம். கொலையாளிகள் அனைவருமே மாற்றுத்திறனாளிகளே.

கிணற்றில் வீசப்பட்ட சாமியின் உடல், இரண்டு மாதங்களுக்கு பின், வெளியே எடுக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த உடைகளை வைத்து, அவரது தாயார் அடையாளம் காட்டினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement