4 சட்டசபை தொகுதிகளில் களம் காணும் 65 வேட்பாளர்கள் ஆலந்துாரில் 23 பேர் போட்டியிடுவதால் 2 ஓட்டு இயந்திரங்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு சட்டசபை தொகுதியிலும் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக ஆலந்துாரில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 100 பேர், 125 வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில், நேற்று நடந்த கூர்ந்தாய்வின்போது, 50 மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டதால், 75 மனுக்கள் ஏற்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான, சினேகா தலைமையில், தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் 15ம் தேதி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதை முன்னிட்டு, 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ குழு என, 72 குழுவினர் அமைக்கப்பட்டு கண் காணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், 12.07 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில், 1,556 ஓட்டுச்சாவடிகளில், 123 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் முக்கியமான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி, கடந்த, 30ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 100 பேர் 125 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

சிலர், தங்களது பெயரில் 3, 4 என அதிக எண்ணிக்கையிலான மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான கூர்ந்தாய்வு 7ம் தேதி நடந்தபோது, மொத்தமுள்ள 125ல், 50 மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

மீதமுள்ள 75 மனுக்களில், 10 பேர் இரு நாட்களில் வாபஸ் பெற்ற நிலையில், மொத்தம் 65 பேரின் மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதாவது, ஆலந்துார் தொகுதியில், 23 வேட்பாளர்களும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 13 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் 15 பேரும், உத்திரமேரூர் தொகுதியில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், நோட்டா பொத்தானுடன் சேர்த்து, 16 பொத்தான்கள் இருக்கும். ஒரு தொகுதியில் 15 வேட்பாளருக்கு மேல் கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டால், மேலும் ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.

அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார் தொகுதியில், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர். அங்கு, 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு இயந்திரங்களை ஓட்டுச்சாவடியில் அமைப்பார்கள்.

Advertisement