'ஏசி' பெட்டியில் காப்பர் ஒயர் திருடிய சிறுவன் சிக்கினான்

ஆலந்துார்:வீட்டின் 'ஏசி' பெட்டியை உடைத்து, காப்பர் ஒயர்களை திருடிய சிறுவன் சிக்கினான்.

ஆலந்துார், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகமது அயூப், 86. கடந்த 7ம் தேதி, இவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 'ஏசி' வெளிப்புற இணைப்பு பெட்டியை உடைத்து, காப்பர் ஒயர்கள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, பரங்கிமலை காவல் நிலையத்தில், முகமது அயூப் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அந்த குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அதில், காப்பர் ஒயர்களை திருடியது, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவனை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், 1.5 கிலோ காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Advertisement