மக்களின் பிரச்னையை தீர்க்க வருவதே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பெருமிதம்

மடிப்பாக்கம்: சோழிங்கநல்லுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன், வார்டு வார்டாக சென்று, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, 197, 187வது வார்டுகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது கந்தன் பேசியதாவது:

இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது, மக்கள் மாற்றத்திற்கு தயாராக இருப்பது கண்கூடாக தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளாக, இத்தொகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு ஏதும் செய்யாமல், தனியார் நிறுவனங்களின் நலனை சார்ந்தே தி.மு.க., அரசு செயல்படுகிறது.

நான் வெற்றி பெற்றால், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை., இணைக்க புதிய பாலங்கள் கட்டப்படும். பெண்கள் பாதுகாப்பிற்காக, முக்கிய இடங்களில் 'சிசிடிவி' அமைக்கப்படும்.

அ.தி.மு.க.,வினர் மக்களின் தேவைகளுக்காகவும், பிரச்னையை தீர்ப்பதற்காகவுமே வருபவர்கள். எனவே, நம் கட்சி நிர்வாகிகள் பகுதி மக்களின் பிரச்னையை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், சோழிங்கநல்லுார் கிழக்கு பகுதி செயலர் பழனிவேல், பா.ஜ., மாவட்ட தலைவர் குமார், பா.ம.க., மாவட்ட செயலர் நிர்மல்குமார், அ.தி.மு.க., வட்ட செயலர் அன்பழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement