தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் வரும் அமைச்சர் அன்பரசன் உறுதி

ஆலந்துார்: ''மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாவரம், பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகள், தமிழக அரசின் கீழ் கொண்டுவரப்படும்,'' என, ஆலந்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அன்பரசன் வாக்குறுதி அளித்தார்.

ஆலந்துார் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

கடந்த தேர்தல் அறிவிப்பில், தான் ஆட்சிக்கு வந்து, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என, முதல்வர் சொன்னாரோ, அதில், 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளார்.

இந்த தேர்தலில், 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்ற, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலினால் மட்டுமே முடியும்.

ஆலந்துாரில் மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கன்டோன்மென்ட் பகுதிகள் மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை.

அதனால், பல்லாவரம், பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகள், தமிழக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இது நடக்கும். இதனை வாக்குறுதியாக இப்பகுதி மக்களுக்கு கொடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது, தி.மு.க., பகுதிச் செயலர் குணாளன், மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் துர்காதேவி நடராஜன், பிருந்தா முரளிகிருஷ்ணா, பாரதி, பூங்கொடி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement