நியமன எம்.பி.,யாக ஹரிவன்ஷ் தேர்வு

புதுடில்லி: ராஜ்யசபா துணை தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கி பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அவரை ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,யாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங், 69, ராஜ்யசபா துணை தலைவராக இருந்தார். இவரது எம்.பி., பதவிக்காலம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் நியமன எம்.பி.,யாக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோயின் பதவிக்காலமும் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, நியமன எம்.பி.,யாக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நேற்று நியமித்தார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று அவர் பதவி ஏற்றார்.

மூத்த பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியான ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஏற்கனவே இரண்டு முறை பீஹார் மாநிலம் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வான நிலையில், தற்போது மூன்றாவது முறையாக எம்.பி.,யாகி உள்ளார்.

Advertisement