அடுக்குமாடி திட்டங்களுக்கு கூட்டு மதிப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் வீடு வாங்குவதற்கான நடைமுறைகள் சற்று வேறுபட்டு இருக்கும். இதில் ஒரு நிறுவனத்தின் திட்டத்தை தேர்வு செய்து, அதில் வீடு வாங்க நீங்கள் முன்பணம் கொடுப்பது வழக்கம்.
இவ்வாறு முன்பணம் கொடுத்து வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடுவீர்கள். இதில் கடந்த காலங்களில், உங்களுக்கான வீடு தொடர்பான விபரங்கள், செலவு தகவல்களை குறிப்பிட்டு கட்டுமான ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம்.
ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் பெயரளவுக்கு இருந்தது, ஒரு கட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்வது கட்டாயமானது. இதற்கு அடுத்தகட்டமாக, அந்த திட்டத்தில் மொத்த நிலம் என்ன என்று பார்த்து அதை ஒவ்வொரு வீட்டுக்கும் என்று பங்கிடப்படும்.
இவ்வாறு பங்கிடப்படும் நிலத்தின் அளவு யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு கிரையப்பத்திரம் பதிவு செய்யப்படும். ஒரு வீட்டுக்கு இரண்டு முறை பத்திரப்பதிவு செய்வதால் செலவு அதிகமாகிறது என்று கூறப்பட்டதால் இதை மாற்ற அரசு முடிவு செய்தது.
இதன்படி, 2023ல் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, கட்டுமான செலவு ஆகியவற்றை சேர்த்து கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் வழக்கம் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு தெருவுக்கும் அடுக்குமாடி கட்டடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், சதுர அடி எவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் சொல்லும் தகவலுக்கு அப்பால் அங்கு நிலவும் கூட்டு மதிப்பு என்ன என்று பார்த்து வீடு வாங்க வேண்டும். நீங்கள் வீடு வாங்கும் திட்டம் அமைந்துள்ள பகுதிக்கான கூட்டு மதிப்பு என்ன என்பதை பதிவுத்துறை இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு போன்று பதிவுத்துறை வெளியிட்ட கூட்டு மதிப்பு அடிப்படையில் மட்டுமே வீட்டின் விலை இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். நிலத்தின் மதிப்பு, கட்டுமான செலவு என்பதுடன் அதில் காணப்படும் வசதிகளையும் கருத்தில் வைத்து தான் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகன நிறுத்துமிடம், லிப்ட், நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி கூடுதல் விலை கேட்டால் அதற்கு உடன்பட வேண்டாம். இது போன்ற வசதிகளையும் கருத்தில் வைத்து குடியிருப்புகள் வகைபடுத்தப்பட்டு தான் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நில வழிகாட்டி மதிப்பு போன்று அடுக்குமாடி வீடுகளுக்கான கூட்டு மதிப்பு விபரங்களை பதிவுத்துறை இணையதளத்தில் எளிதாக பெறலாம். இதை கவனித்து வீடு வாங்கினால், தேவையில்லாத கூடுதல் செலவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு போன்று பதிவுத்துறை வெளியிட்ட கூட்டு மதிப்பு அடிப்படையில் மட்டுமே வீட்டின் விலை இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி