அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள்

திருச்சி: அரிவாளுடன் பைக்கில் சுற்றி ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருச்சி மாநகரில், டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் இருந்து, மத்திய தலைமை தபால் அலுவலகம் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் மதியம், இரு வாலிபர்கள் பைக்கில் சென்றுள்ளனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், இரண்டு அடி நீளமுள்ள அரிவாளை சுழற்றியபடி கூச்சலிட்டார்.

பின், அரிவாளை சாலையில் தேய்த்து, தீப்பொறியை தெறிக்கவிட்டு, சாகசத்தில் ஈடுபட்டார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அரிவாளுடன் வாலிபர்கள் ரகளை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement