திடீரென தீப்பிடித்த சிமெண்ட் லாரி 40 டன் சிமெண்ட் மூட்டைகள்  சேதம்:  திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி: சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 40 டன் சிமெண்ட் மூட்டைகள் சேதமடைந்தன.

அரியார் மாவட்டம், ஆலத்தியூர் அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து அதிகாலை 3:00 மணியளவில் டாரஸ் லாரி, 40 டன் எடையுள்ள சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேப்பூர், சேலம் வழியாக கர்நாடகா மாநிலம் சென்றது. லாரியை தருமபுரி மாவட்டம், உச்சம்பட்டியை சேர்ந்த டிரைவர் துரை, 28; என்பவர் ஓட்டினார்.

அப்போது அதிகாலை 3:30 மணியளவில் திட்டக்குடி அடுத்த அருகேரி கிராமம் அருகே சென்ற போது லாரியில் திடீரென புகை பரவியது.

இதையறிந்த டிரைவர் லாரியில் இருந்து இறங்கி எஞ்சின் பகுதியை பார்த்தபோது, அதிலிருந்து தீ பரவ துவங்கியது. டிரைவர் கூச்சலிட அருகில் இருந்து யாரும் வராததால் லாரி முழுவதும் தீ பரவியது.

தகவலறிந்த, திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.

இதில், லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட, 40 டன் எடையிலான 800 சிமெண்ட் மூட்டைகள் சேதமடைந்தன. தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement