நம் வேலைகளை நாமே செய்வதும் சேமிப்பு தான்!

திண்டிவனத்தைச் சேர்ந்த, 46 வயதான ம.வசந்தி: என் கணவர் மணிகண்டன் தான், எங்கள் வீட்டின் நிதியமைச்சர். எங்களுக்கு திருமணம் ஆகி, 25 ஆண்டுகள் ஆகின்றன.

திருமணமான போது, 'ஸ்டீல் பீரோ' தயாரிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தார், என் கணவர். வாடகை கட்டடத்தில் தான், நிறுவனம் இயங்கியது. நாங்கள் குடியிருந்ததும் வாடகை வீடு தான்.

கணவரின் தொழிலில், சில நேரங்களில் வருமானம் அதிகமாகவும், சில நேரங்களில், குறைவாகவும் இருக்கும். அதற்கு ஏற்ப செலவுகளை திட்டமிட வேண்டிய அவசியம், எங்களுக்கு இருக்கும்.

திருமணமான முதல், ஐந்து ஆண்டுகளில், சேமிப்பு என்பதே இல்லை. தொழிலை புதிதாக ஆரம்பித்திருந்ததால், வியாபாரம் நிலையாக வரும் வரை பணத்தை எடுக்காமல், மீண்டும் தொழிலிலேயே போட வேண்டிய அவசியம் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், வருமானத்தின் ஒரு பகுதியை, வங்கியில் சேமிக்க ஆரம்பித்தார், என் கணவர்.

மு க்கியமான பொருளோ அல்லது நகையோ கேட்டால், வங்கியில் சேமித்து வைத்த பணத்தில் இருந்து வரும் வட்டியை எடுத்து தான், வாங்கி தருவார்; அசலை எடுக்க மாட்டார். அதுவும், அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்வார்.

குழந்தைகளும் சரி, நானும் சரி, தேவையில்லாத பொருட்கள் மீது ஆசைப்படுவதில்லை; 'எப்போதும் வீட்டுக்கு தேவையான பொருட்களை பணம் சேர்த்து வாங்குவதால், கடன் கட்ட வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ முடியும்...' என்பார்.

என் கணவர், யாருக்கும் கடன் கொடுப்பதும் இல்லை; யாரிடமும் வாங்குவதும் இல்லை. பணத்தை சம்பாதித்து, சேர்த்து தான், வீட்டு மனை வாங்கினார், பணம் சேர்த்த பின், தான் வீடு கட்டினார்; தன் நிறுவனத்திற்கு சொந்த இடத்தை யும் வாங்கினார்.

அன்றிலிருந்து இன்று வரை, நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது, மூலப்பொருட்களை வாங்குவது, வினியோகம் செய்வது போன்ற வேலைகளை என் கணவரே செய்கிறார். பீரோ செய்வதற்கு மட்டுமே ஆட்களை வேலைக்கு வைத்திருக்கிறார்.

இதர வேலைகள் அனைத்தையும் இவரே செய்வதால், இன்று வரை சம்பளத்துக்கு ஆள் வைக்கவில்லை; வீட்டிலும் நானே அனைத்து வேலைகளையும் செய்வதால், வீட்டு வேலைக்கும் ஆள் வைக்கவில்லை.

'முடிந்தவரை நம் வேலைகளை நாமே செய்வதும், பணத்தை சேமிப்பதற்கு சமமான விஷயம் தான்...' என்று சொல்வார், என் கணவர். மகள் பொறியியல் மேற்படிப்பும், மகன் மருத்துவக் கல்லுாரியிலும் பயில்கின்றனர்.

அளவான பொருட்களோடு, ஆடம்பரம் இல்லாமல், சுறுசுறுப்பாக, நிம்மதியாக, பொருளாதார சுதந்திரத்தோடு என் குடும்பம் இன்று வரை இருக்க, என் கணவரின் நிதி நிர்வாகம் தான் காரணம் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

தொடர்புக்கு:

96774 13716

Advertisement