தி.மு.க., ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து சிதம்பரம் பிரசாரம்

அவனியாபுரம்: திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியை ஆதரித்து காங்., மூத்த தலைவர் சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

அவனியாபுரத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., தலைமையில் மதசார்பற்ற கூட்டணி 2019 பார்லி., தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 பார்லி., தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 4வது முறையாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2024 தேர்தலில் அரசியல் அரசியல் சாசனத்தை திருத்தி இந்தியாவை சீர் கெடுத்து விடுவார்கள் என கூறினோம். 39 எம்.பி.,க்களை வெற்றி பெறச் செய்தீர்கள். அதனால் அரசியல் சாசனத்தை திருத்தக்கூடிய அதிகாரம் மோடிக்கு கிடைக்கவில்லை. நாளை பார்லி., கூட்டத்தை கூட்டுவதில் சதிவலை உள்ளது. அரசியல் சாசனம் திருத்தப்பட்டால் தென் மாநிலங்களின் எம்.பி., க்கள் எண்ணிக்கை குறையும். இந்த சதியை முறியடிக்க வேண்டும்.

அ.தி.மு.க., பல துண்டுகளாக சிதறி கிடக்கிறது. பழனிசாமி சுதந்திரமாக செயல்படுவார் என நம்ப முடியாது. மதுரை மண் உள்ளவரை அரசியலில் பிழை நடக்காது. பழனிசாமி என்ற முகமூடியை அணிந்து கொண்டு பா.ஜ., அரசியல் களமாடுகிறது. இந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சி ஏராளமான திட்டங்களை செய்துள்ளனர். வளர்ச்சி, நலத்திட்டங்கள்தான் நாட்டின் முன்னேற்றத்தின் வளர்ச்சியை குறிக்கும். அந்த வகையில் தரவரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பணப்புழக்கம்தான் பொருளாதார உயர்வுக்கு காரணம். ஸ்டாலின் தேர்தல் அறிக்கைகள் அறிவித்த ரூ. 8 ஆயிரம் கூப்பன் திட்டத்தால் தமிழகத்தில் பணப்புழக்கம் பெருமளவு இருக்கும். பொருளாதாரம் உயரும். தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும். கிருத்திகா தங்க பாண்டிக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

Advertisement