தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டளித்த ஆசிரியர்கள்:  கட்டாயப்படுத்தியதால் அதிருப்தி

மதுரை: மதுரையில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் பெரும்பாலான ஆசிரியர்கள் தபால் ஓட்டு அளித்தனர்.

மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிக்கான மையங்களில் நடந்தன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் ஓட்டுச் சாவடியிலேயே ஓட்டுப் பதிவு செய்யும் வகையில் எலக் ஷன் டியூட்டி சர்ட்டிபிகேட் (இ.டி.சி.,) வழங்கப்பட்டது. பிற தொகுதி ஆசிரியர்களுக்கு இம்முகாமில் தபால் ஓட்டு அளிக்க முன்னேற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி மையத்திலேயே தபால் ஓட்டைப் பதிவு செய்ய ஓட்டுச் சீட்டு வழங்கப்பட்டது. ஆளறி சான்று (அட்டெஸ்டேஷன்) வழங்க தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஓட்டளிக்க ரகசிய அறை, சீலிடப்பட்ட பெட்டி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஆசிரியர்கள் தபால் ஓட்டு அளித்தனர்.

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பயிற்சி மையத்தில் 'தபால் ஓட்டை இன்றே அளிக்க வேண்டும்' என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால் ஆசிரியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அங்கிருந்து தேர்தல் அலுவலர்கள் (ஆர்.ஓ.,க்கள்) தபால் ஓட்டுகளை மையங்களுக்கு அனுப்பி வைக்காததால் அவர்கள் தபால் ஓட்டு அளிக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் கூறுகையில், தபால் ஓட்டளிக்க சில மையங்களில் கட்டாயப்படுத்தியதால் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். இத்தேர்தலில் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச் சாவடியில் தான் பணி ஒதுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனாலும் 10 சதவீதத்திற்கும் மேலாக வேறு தொகுதிகளில் பணி ஒதுக்கப்பட்டது. எனவே 'ரிசர்வ்'ல் வைக்கப்படுவோர் பட்டியலில், இந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனர்.

Advertisement