பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசியோருக்கு வலை

சிவகங்கை: பெண்ணை வெட்டி கொன்று, உடலை கிணற்றில் வீசிய நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பை சேர்ந்த சுரேஷ் மனைவி சுசீலா, 42; நெடுங்குளம் ஊராட்சி துாய்மை காவலர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுசீலா தனியாக வசித்தார்.

இரு குழந்தைகளும், சுசீலா தங்கை வீட்டில் தங்கி படிக்கின்றனர். சுசீலா மாடு வளர்த்து, பால் விற்பனை செய்தார்.

நேற்று காலை, வீடுகளுக்கு பால் ஊற்ற சுசீலா வராததால், அருகில் உள்ளவர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு, வீட்டின் கதவு திறந்து கிடந்து, பொருட்கள் சிதறி கிடந்தன.

தாலுகா போலீசார் சோதனையிட்டதில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சுசீலா உடல் மிதப்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள், சுசீலாவின் உடலை மீட்டனர்.

சுசீலா தலையில் வெட்டு காயம் இருந்ததால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், சந்தேகத்தில், மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement