துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 'விறுவிறு'

--நிருபர் குழு-

அவிநாசி, சூலுார், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் உள்ள பகுதிகளில், மூத்த குடிமக்கள் ஆர்வமாக தபால் ஓட்டு செலுத்தினர்.



தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என பட்டியலிடப்பட்டவர்களுக்கு, தபால் ஓட்டு அளிக்கும் வாய்ப்பு அளித்துள்ளது.

இதற்காக இரு வாரங்களுக்கு முன், தபால் ஓட்டு போடு வதற்கான 12டி படிவம் நிரப்பி தந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடும் பணி நேற்று துவங்கியது. அவிநாசி தொகுதியில், முக்கிய அரசியல் கட்சிகளின் நான்கு வேட்பாளர்கள் உட்பட, 14 பேர் களத்தில் உள்ளனர்.

அன்னுார் வருவாய் கிராமத்தில், 61 பேருக்கு தபால் ஓட்டு ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று கிராம நிர்வாக அலுவலர் குமரன், மண்டல அலுவலர் கீதா லட்சுமி, ஓட்டுச்சாவடி அலுவலர் அனுராதா உள் ளிட்டோர், தென்னம்பாளையம் ரோடு, ராஜிவ் வீதி, காமராஜர் வீதி பகுதிகளில், மூத்த குடிமக்களிடமிருந்து தபால் ஓட்டுக்களை பெற்றனர். 61 பேரில், 51 பேர் தபால் ஓட்டு செலுத்தினர்.

தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'மாலை 5:00 மணி வரை பெறப்படும் தபால் ஓட்டுக்கள் அவிநா சி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும். இதில், ஓட்டுப்பதிவு செலுத்தாதவர்கள், 23ம் தேதி நேரடியாக ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்யலாம்' என்றனர்.

சூலுார் சூலுார் தொகுதியில், 1,535 மாற்றுத் திறனாளிகள், 2,027 பேர் 85 வயதுக்கும் மேற்பட்டோராகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 887 பேர் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பெற்றனர். இப்பணியினை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் ஆய்வு செய்தார்.

ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த, 105 வயதான கணபதி கவுண்டர், இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஓட்டளித்துள்ளார். உடல்நலக்குறைவால் தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்து இருந்தார். அவர் வீட்டுக்கு சென்ற தேர்தல் பிரிவினர், அவரிடம் தபால் ஓட்டு பெற்றனர்.

கவுண்டம்பாளையம் கவுண்டம்பாளையத்தில் தொகுதியில், 2,818 பேர் தபால் ஓட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தபால் ஓட்டு போட, 19 பூத்தில், 91 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நேற்று முதல் கட்டமாக ராக்கிபாளையம் வட்டாரத்தில், 8 பேர் தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர். தொடர்ந்து, தபால் ஓட்டுக்களை பதிவு செய்யும் பணி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றி நடக்கும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement