கிரைம் கார்னர்

கழிவுநீர் கிடங்கில் விஷ வாயு சுவாசித்த இருவர் பரிதாப பலி



குருகிராம்: அம்பேத்கர் சவுக் என்ற இடத்தில் உள்ள கழிவு நீர் கிடங்கு ஒன்றில் கழிவுகள் அடைத்து கொண்டதாக, அந்த பகுதியினர் முனிசிபாலிட்டிக்கு தகவல் தெரிவித்தனர். ஐந்து பேர் கொண்ட ஊழியர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

என்.எச்., 248 ஏ என்ற இடத்தில் இருந்த அந்த குழிக்குள் முதலில் இறங்கிய ஊழியர் ஒருவர் நீண்ட நேரமாக வெளியே வராததால், அவரை தேடி இறங்கிய மற்றொரு ஊழியரும் தொட்டியிலேயே இறந்தார். அந்த கழிவுநீர் தொட்டியில் விஷவாயு சேர்ந்து இருந்ததால், அதை சுவாசித்த இருவரும் இறந்தனர்.

அவர்களின் உடலை அங்கிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கிய மூன்று ஊழியர்களும் மயங்கினர். அதையடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்த பணியாளர், அங்கிருந்து தப்பினார். போலீசார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.



குருகிராமில் தீ விபத்து 5 பேர் பத்திரமாக மீட்பு



குருகிராம்: திடீரென பற்றிய தீயில் சிக்கிக் கொண்ட ஐந்து பேரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

குருகிராமில் உள்ள ஷீட்லா காலனியில் வீடுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன. அந்த பகுதியில், பின்டு கட்டாரியா என்பவர் மாடி வீடு கட்டிக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அதை அறிந்தவர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

வீரர்கள் அங்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது, ஒரு கட்டடத்தின் உள்ளே இருந்த ஐந்து பேர் வெளியே வர முடியாமல் அலறிக் கொண்டிருந்தனர்.

அதை அறிந்த வீரர்கள், பக்கத்து மாடி வழியாக அந்த கட்டடத்திற்குள் நுழைந்து, சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருந்த கட்டடத்தில் இருந்து, அந்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர்.

எனினும், நீண்ட நேரமாக அவர்கள் புகையை சுவாசித்ததால், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



யமுனை நதியில் மூழ்கி

இரண்டு மாணவர்கள் பலி



புதுடில்லி: டில்லியில், யமுனை நதியில் மூழ்கி, 13 வயதான இரண்டு மாணவர்கள் இறந்தனர். ஆற்றில் விளையாடச் சென்ற ஐந்து பேரில், இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், டில்லியின் திமாபூர் பகுதியில் பாயும் யமுனை நதிக்கு, ஐந்து மாணவர்கள் நேற்று முன்தினம் மாலையில் சென்றனர். அவர்களில் இருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், அந்த மாணவர்கள் நீரில் மூழ்கத் துவங்கினர்.

அவர்களின் அலறல் சத்தம், பிறருக்கு கேட்காத அளவுக்கு அந்த பகுதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இதனால், இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். பிற மாணவர்கள் அருகில் இருந்தவர்களிடம் அவர்களை மீட்கக் கோரினர். அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் அங்கு விரைந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன், நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள் உடல்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.



விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை

எட்டு பேர் மீது போலீசில் புகார்



பரீதாபாத்: டில்லி அருகே உள்ள பரீதாபாத் நகரில் லாரிகளை வைத்து, போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, அவருக்கு பணம் கொடுத்த, எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சந்திரபிரகாஷ் சேத்தி, 42, என்ற நபர், இன்டஸ்டிரியல் டவுன்ஷிப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். லாரிகளை வைத்து தொழில் செய்து வந்த அவருக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டது.

அதையடுத்து, 15 லட்ச ரூபாயை பலரிடம் அவர் கடனாக வாங்கியிருந்தார். இதற்கிடையே, அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்த நபர், திடீரென அந்த பணத்தை திருப்பி கேட்டார்.

இதையடுத்து, என்ன செய்வது என தெரியாமல் இருந்த அவரை, கடன் கொடுத்த எட்டு பேர் பல விதங்களில் மிரட்டி வந்தனர். இதனால், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மனைவி தீபிகா அளித்த புகாரின் படி, அவரை மிரட்டி, தற்கொலைக்கு துாண்டியதாக, எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



மணமகள் முகத்தில் ஆசிட் வீச்சு

போலீசில் சிக்கினார் பெண்



புதுடில்லி: வட கிழக்கு டில்லியின் கோகுல்புரி என்ற இடத்தில், தன் முன்னாள் ஆண் நண்பரின் மணமகள் மீது ஆசிட் ஊற்றிய பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோகுல்புரியின் இந்திரா விஹார் என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்தது. தன் முன்னாள் ஆண் நண்பருக்கும், மணமகள் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

அதை அறிந்த ஒரு பெண், தன் முன்னாள் ஆண் நண்பரின் மனைவியாக போகிறவர் முகத்தில் ஆசிட் ஊற்றினார். இதில், அலறி துடித்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் மீது ஆசிட் ஊற்றிய, 26 வயது பெண்ணை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புத்தவிஹாரில் தீ விபத்து

தம்பதியுடன் குழந்தை பலி

புதுடில்லி, ஏப். 16-

டில்லியின் புத்தவிஹார் பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் வசித்த தம்பதி, தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் தீயில் எரிந்து கருகி கிடந்தனர். மூன்று பேரின் உடல்களை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

மாங்கே ராம் பார்க் என்ற பகுதியில் குடிசை வீடுகள் பல உள்ளன. புத்த விஹாரில் உள்ள அந்த இடத்தில், நேற்று முன்தினம் காலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு தம்பதி மற்றும் அவர்களின் 3 வயது பெண் குழந்தையின் உடல்களை போலீசார் மீட்டனர்.

பக்கத்து குடிசை வீடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், இந்த குடிசை வீடு மட்டும் தீயில் எரிந்துள்ளதால், நாச வேலை காரணமாக மூவரும் கொல்லப்பட்டனரா அல்லது தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement