'மினிமம் பேலன்ஸ்' தொல்லை தொடர்வது ஏன்?

நான் சிறுநிதி வங்கி ஒன்றில் வைப்பு நிதி போட்டேன். அதற்காக ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் துவங்கினேன். வைப்பு நிதி இருந்த வரை எந்த பிரச்னையும் இல்லை. எப்.டி., பணத்தை எடுத்த பிறகு, குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. விசாரித்ததில் அது 'சுப்ரீம் அக்கவுன்ட்' என்று சொன்னார்கள். குறைந்தபட்ச இருப்பு வைக்காததால், 19,000 ரூபாய் அபராதமாக கட்டினால் தான் கணக்கை தொடரலாமாம்; அதை முடிக்கவும் மாட்டார்களாம். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

பெரியசாமி, சென்னை ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காக அபராதம் வசூலிக்கலாம். ஆனால், அந்த அபராதம் நியாயமானதாகவும் அளவோடும் இருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர் கணக்கு இருப்பை 'மைனஸ்' நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அபராதம் விதிப்பது அனுமதிக்கப்படாது.

குறைந்தபட்ச இருப்பு தொடர்பாக, 2015 ஏப்ரல் 1ல் ரிசர்வ் வங்கி, 'சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காக விதிக்கப்படும் அபராத தொகையால், ஒரு போதும் வாடிக்கையாளரின் கணக்கு இருப்பு 'மைனஸ்' ஆகக் கூடாது' என்று சொல்லியிருக்கிறது.

அதாவது, உங்கள் கணக்கில் பணம் இல்லை என்றால், அதை பிடித்து கணக்கை 'ஜீரோ' ஆக்கலாமே தவிர, அபராதம் போட்டு மைனஸில் கொண்டு செல்ல எந்த வங்கிக்கும் உரிமையில்லை.

அதனால், அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு கடிதம் எழுதி, கணக்கை நிரந்தரமாக மூடச்சொல்லி கேளுங்கள்; அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையரின் பார்வைக்கு எடுத்து செல்லுங்கள். அங்கே உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.



மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 10 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக போட்டால், பணத்திற்கு 'டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' பாதுகாப்பு இருக்கிறதா?

எம்.மகேஷ் நாகராஜ், சாத்துார் ஆம், 5 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. உங்கள் பயத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இந்தியாவில் சமீப ஆண்டுகளில் எந்த வங்கியும் திவால் ஆனதாக சரித்திரம் இல்லை. இன்னொரு விஷயம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும், நபார்டு வங்கியின் கண்காணிப்பிலும் இயங்குகின்றன.

இவை, அவ்வளவு எளிதில் எந்த நெருக்கடியையும் சந்திக்காது. ஏதேனும் பிரச்னை ஏற்படுமானால், முன்னதாகவே அவை கண்டுபிடிக்கப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.



என் சகோதரர், அவரது நண்பர் வாங்கிய கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். அவர் தொடர்ந்து பணம் கட்டாமல் போகவே, வங்கியில் இருந்து அண்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ் வந்துள்ளது. ஜாமின் கையெழுத்து போட்டவரிடம் பணம் வசூலிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது என சிலர் கூறுகின்றனர்; உண்மையா?

இரா.சண்முகசுந்தரம், திருப்பூர் இல்லை. நீங்கள் சொல்வது வதந்தி. ஜாமின் கையெழுத்து போட்டவரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கடன் வாங்கியவர் கட்டவில்லை என்றால், வங்கியின் பார்வையில் ஜாமின் போட்டவர் தான் கடனாளியாக கருதப்படுவார்.



ஒருவர் எனக்கு அளித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பணமாக்க, வங்கி கிளைக்கு போயிருந்தேன். வங்கி காசாளர் மற்றும் அலுவலர்கள், வங்கி கணக்கு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் நேரில் வந்தால் மட்டுமே 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர் என்றும், மூன்றாம் நபர் பெயரில் அளிக்கப்படும் காசோலைகள் 25,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு அளிக்கப்பட்டிருந்தால், காசோலைக்கு பணம் தர இயலாது என்றும் தெரிவித்து விட்டனர். இது உண்மையா?

வி.சுந்தரராஜ், கோவை மூன்றாம் நபருக்கு இவ்வளவு தான் பணம் தர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு குறிப்பிட்ட தொகையையும் குறிப்பிட்டு எந்த விதியையும் விதிக்கவில்லை.

ஆனால், பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் வாடிக்கை யாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, மோசடிகளை தடுக்க, ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கென சில -விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள, ரிசர்வ் வங்கி முழு அதிகாரம் அளித்து உள்ளது.

இதன் அடிப்படையில், பெரும்பாலான வங்கிகள் மூன்றாம் நபர் காசோலை மூலம் நேரடியாக ரொக்கமாக பணம் எடுப்பதற்கு 50,000 அல்லது தற்போதைய புதிய விதிகளின்படி 25,000 ரூபாய் என உச்ச வரம்பை நிர்ணயித்து உள்ளன.

எதற்கு இந்த இம்சை? காசோலையை ரத்து செய்துவிட்டு, உங்கள் கணக்கிற்கு நேரடியாக ஆர்.டி.ஜி.எஸ்., அல்லது 'நெப்ட் ' செய்ய சொல்லுங்களேன்.



ஒருபுறம் சரிந்து வரும் வங்கி வட்டி விகிதம், இன்னொரு புறம் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை மீறி, கூடுதல் வருவாய் ஈட்டும் முதலீட்டு திட்டம் உள்ளதா?

செ.செல்வக்கோபெருமாள் , காஞ்சிபுரம் 'பாதுகாப்பான, உத்தரவாதமான, நம்பகமான' உள்ளிட்ட வார்த்தைகள் தங்கள் கேள்வியில் இல்லை. அதனால், தாங்கள் ரிஸ்க் எடுக்க துணிந்தவர் என்று கருதுகிறேன். பணவீக்கத்தையும், வட்டி விகித சரிவையும் ஈடுகட்ட வேண்டும் என்றால், கொஞ்சம் ரிஸ்க்கான முதலீடுகளில் தான் பணத்தை போட வேண்டியிருக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் தான் இன்றைய தேதியில் கொஞ்சம் கூடுதல் வருவாயை ஈட்டித் தர முடியும். பங்குச் சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தங்களால் தாங்க முடியும் என்றால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.



எனக்கு 80க்கு மேல் வயது. வங்கி வட்டி வருமானம் தான் என் ஜீவாதாரம். எவ்வளவு வருவாய் வந்தால், நான் வருமான வரி கட்டாமல் '15 எச்' கொடுத்து இருக்கலாம்?

என்.ராஜகோபாலன், சென்னை புதிய வருமான வரி விதிகளின்படி, உங்களுக்கு வரும் வட்டி மற்றும் இதர மொத்த ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாயை தாண்டவில்லை என்றால், நீங்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. எனவே, எந்த கவலையுமின்றி ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் வங்கியில் '15 எச்' படிவத்தை கொடுத்து விடுங்கள். வங்கி உங்கள் வட்டியில் இருந்து 1 ரூபாய் கூட டி.டி.எஸ்., பிடிக்காது.

Advertisement