பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
மிரட்டல் வரும் வி.பி.என்., ஐ.டி., வெளிநாட்டில் இருந்து வருவதால், சைபர் கிரைம் போலீசார் அந்த தகவலை பெறுவது கடினமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலக இ-மெயில் ஐ.டி.,க்கு இடம் குறிப்பிடாமல் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதையடுத்து, தலைமை அலுவலகத்தில் இருந்து புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் போலீசாருக்கு மதியம் 12:20 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிமேடு தீயணைப்பு துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் லீயோ வரவழைக்கப்பட்டு, பாஸ்போர்ட் அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதியம் 1:30 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு இருப்பதற்கான எந்தவித தடயங்களுக்கும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாக முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வராமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வர துவங்கியுள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
கூடுதல் பஸ் இயக்கணும்
-
'மாதிரி' டோக்கன் வழங்குவதில் போட்டா போட்டி :இரு கட்சியிலும் பூத் கமிட்டிகளுக்கு தாராளம்
-
வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை ஜோர்
-
ஆற்றில் குப்பை கொட்டினால் அபராதம்: பொதுமக்களுக்கு நகராட்சி எச்சரிக்கை
-
கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தி.மு.க., ;அ.ம.மு.க., சண்முகவேலு குற்றச்சாட்டு
-
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு நுாலகத்தில் விழிப்புணர்வு