அனைவருக்கும் ரூ.8,000 கூப்பன் தி.மு.க.,வின் முதல் கையெழுத்து கும்மிடி தி.மு.க., வேட்பாளர் உறுதி

ஊத்துக்கோட்டை: ''சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக தி.மு.க., வெற்றி பெற்றவுடன், அனைவருக்கும் 8,000ரூபாய்க்கான கூப்பன் வழங்குவது முதல் கையெழுத்தாக இருக்கும்,'' என, கும்மிடிப்பூண்டி தி.மு.க., வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதியளித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் போட்டியிடுகிறார். 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வாக உள்ள இவர், கடந்த 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

நேற்று, பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள போந்தவாக்கம், கச்சூர், கலவை, வெலமகண்டிகை, நந்திமங்களம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, கோவிந்தராஜன் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க., நிறைவேற்றி உள்ளது.

இரண்டாவது முறையாக தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றால், அனைத்து குடும்பங்களுக்கும் 8,000 ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்படும். இதுவே, முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்தாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தி.மு.க., மாவட்ட செயலர் ரமேஷ்ராஜா, முன்னாள் மாவட்ட செயலர் இ.ஏ.பி.சிவாஜி, பூண்டி ஒன்றிய செயலர் டி.கே.சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லைகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement