காங்., மகளிர் அணி கூட்டத்தில் மோதல்; நாற்காலிகளை துாக்கி வீசி கைகலப்பு

20

சென்னை: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த தமிழக மகளிர் காங்., செயற்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தது.

சென்னையில் தமிழக காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய மகளிர் காங்., தலைவர் அல்கா லம்பா தலைமையில் மகளிர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் மற்றும் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 'தமிழக மகளிர் காங்., பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்படுகிறார்; சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என அறிவிக்கப்பட்டது.

அதற்கு, மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'எங்களை ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மாநில தலைவரை அறிவித்ததை ஏற்க முடியாது' என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், கைகலப்பாக மாறியது; நாற்காலிகளை எடுத்து வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, ''மாநில தலைவராக ராமலட்சுமி தான் செயல்படுவார். பின், முறையாக மாநில தலைவர் அறிவிக்கப்படுவார்; எல்லாரும் ஏற்க வேண்டும்; இல்லாவிட்டால் மாவட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அல்கா லம்பா எச்சரித்தார். இதனால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இது குறித்து, மகளிர் காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தலில், மகளிர் காங்கிரசுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், 28 தொகுதிகளில் இரண்டு பெண்களுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என பணியாற்றி, அகில இந்திய செயலர், மாநில தலைவர் பொறுப்பு வகித்த ஹசீனாவுக்கு 'சீட்' வழங்கவில்லை.



இதனால், அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ஆனால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை அல்கா லம்பா நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசீனா சையது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement