இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்

61


சென்னை: நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதம் குறித்து நான் தான் பேசினேன்; இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், 'நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை மறுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத் தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.



அதை யாரும் பறிக்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பதில் அளித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: "நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.


கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.


தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement