நெல்லுக்கான ஊக்கத்தொகை கடித விவகாரத்தில் தாமதம் ஏன்? மூன்று மாதமாக ஸ்டாலினிடம் மறைக்கப்பட்டதா?

30

- நமது நிருபர் -

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில், மத்திய அரசு கடிதம் எழுதிய தகவலை, மூன்று மாதம் கழித்து,முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியில் அனுப்பிய கடிதம், முதல்வரிடம் மறைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'அதிகாரிகள் ஒரு கடிதத்தை என்னிடம் காண்பித்தனர். மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்தான் அது. தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக, நெல் உற்பத்தி பெருகி வருகிறதாம். அதனால், பிரச்னைகள் உருவாகிறதாம். எனவே, நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளனர்' என்றார்.

இதற்கு பதில் அளித்து, உடனடியாக நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டார். அதில், 'அனைத்து மாநிலங்களுக்கும், அந்த கடிதம் அனுப்பப்பட்டது. மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை கொள்கையை, தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகை அளிப்பது, மாநில அரசுகளின் அதிகாரம்; அதை யாரும் பறிக்கவில்லை' என, குறிப்பிட்டார்.


கடிதம் மறைக்கப்பட்டதா;




உடனே ஸ்டாலின், 'தாங்கள் சொல்வது உண்மை என்றால், அந்த கடிதத்தை வெளியிட நீங்கள் தயாரா' என கேட்டார். அதை தொடர்ந்து, நிர்மலா அந்த கடிதத்தை, வலைதளத்தில் வெளியிட்டார். அது ஜனவரி 9ம் தேதியிட்ட கடிதம். இதுவரை அது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை; முதல்வரும் கருத்து கூறவில்லை.

ஜனவரியில் வந்த கடிதத்தை, இப்போது அதிகாரிகள் தந்ததாக, முதல்வர் கூறியுள்ளார். அப்படியென்றால் மூன்று மாதங்கள், அந்த கடிதம் முதல்வருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதா; அல்லது தேர்தலுக்காக தற்போது இப்பிரச்னையை எழுப்புகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், ''ஊக்க தொகையை நிறுத்த வேண்டும் என, நிதி அமைச்சக கடிதத்தில், மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை” என ஸ்டாலின் கூறினார்.



அரசியல் ஆதாயம்





அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “பருப்பு, எண்ணெய் வித்து, சிறுதானிய உற்பத்தியை பெருக்கி, சமையல் எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதன் வாயிலாக, பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, தேசிய உணவு பாதுகாப்பிற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு. பெரும்பாலான மாநில அரசுகள், இதை புரிந்து கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், ஸ்டாலின் மட்டுமே, இதை சர்ச்சையாக்கி ஆதாயம் தேட பார்க்கிறார். தி.மு.க.வை பொறுத்தவரை, இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே, அவர்களின் நோக்கம்” என கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், 'பெரும்பாலான மாநில அரசுகள், நெல்லுக்கு ஊக்கத்தொகை தர வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாக, தாங்கள் தெரிவித்திருப்பது, உண்மைக்கு புறம்பானது. கேரள முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடித விவகாரத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து, எந்த விளக்கமும் தரவில்லை.

@block_B@ 3 மாதம் துாங்கி விட்டு புலம்புவதா?

எண்ணெய் வித்து, பயிறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க, நெல்லுக்கான ஊக்கத்தொகையை அந்த பயிர்களுக்கு வழங்கலாம் என்ற, மத்திய அரசின் ஆலோசனையை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லை. மத்திய அரசின் கடிதம், ஜனவரியில் அனுப்பப்பட்டது. இது பற்றி ராஜ்யசபாவில் மா.கம்யூ. கேள்வி எழுப்பியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் மவுனமாக இருந்தனர். மூன்று மாதம் துாங்கி விட்டு, இப்போது, தி.மு.க.வுக்கு எதிராக வீசும் அலையை தடுத்து விடலாம் என்ற நப்பாசையில், ஸ்டாலின் புலம்புகிறார்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.block_B

Advertisement